Friday, November 16, 2007

கார்த்திக் குணமடைந்து வருகிறான்

அன்பான வலைப் பதிவு நண்பர்களே!!!!

மீண்டும் மீண்டும் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையை உணர்கிறேன்.

சில தினங்களுக்கு முன் கார்த்திக் என்ற இளைஞன் மருத்துவ ஆலோசனையின்றி அபாயகரமான மாத்திரைகளை உட்கொண்டதால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானதையும் அவனுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டிருந்தேன்.

அவன் தற்சமயம் மருந்துகளின் விளைவால் ஏற்பட்ட உபாதைகளிலிருந்து மீண்டு சிறுநீரகம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் நன்கு குணமடைந்து வருவதாகவும் நண்பர் மூலம் அறிந்தேன்.

அவானுக்காக பிரார்த்தித்த அனைத்து அன்பான இதயங்களுக்கும் நன்றி.
நன்றி.............நன்றி.

குறிப்பு:

பதிவர் அனுராதா அம்மாவுக்காகவும் பதிவிட்டிருந்தேன்.அவர்களும் குணமடைந்து வருவதாக
நன்றி பதிவிட்டிருந்தார்.

நண்பர்கள், உறவினர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ய விரும்பும் பதிவர்களுக்கு இந்த 'பிரார்த்தனை நேரம்' பதிவு திறந்து விடப் படுகிறது.
விருப்பப்படும் நண்பர்கள் மெயில் முகவரி தந்தால் இணைப்பு கொடுக்கப் படும்.

Monday, November 12, 2007

கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம்

இன்றைய தினத்தின் என்னுடைய இரண்டாவது பிராத்தனையிது.

எங்கள் நண்பர் திரு இராமச்சந்திரன் திருமதி.உஷா இராமச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு.கார்த்திக்.
இவர் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு.31 வயதே ஆன இளைஞர்.

சில தினங்களுக்கு முன்பு ஜுரம் உடல்வலி என்ற காரணங்களுக்காக தடை செய்யப் பட்ட மருந்தான நிமோசில்லின் [சரிதானே] வகையைச் சேர்ந்த மாத்திரைகளை
[மருத்துவ ஆலோசையின் பேரிலா இல்லையா என்பது தெரிய வில்லை]உட்கொண்டிருக்கிறார்.

அதிலும் ஓவர் டோஸாக இரண்டே தினங்களில் சுமார் பத்து பன்னிரெண்டு மாத்திரைகள் வரைஎடுத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.

அதன் விளைவாக சில தினங்களாக சரிவர சிறுநீர் பிரியாமல் வேதனைப் பட்டு மிகவும் அபாயகரமான கட்டத்தில் பெங்களூருவில் இருந்து அழைத்து வரப் பட்டு தற்சமயம் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய கல்லீரலும் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்னமும் நீர் பிரியாமல் உணவும் உட்கொள்ளமுடியாத நிலையில் உள்ளார்.ஒரு நாளைக்கு 30 மி.லி அளவு தண்ணீர் மட்டுமே பருக வேண்டிய நிலைமை.தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப் பட்டு வருகிறது.

அந்த இளைஞர் குணமடைந்து வர நண்பர்களின் பிரார்த்தனைகள் உதவட்டும்.

அனுராதா அம்மாவுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை

நம் சக வலைப் பதிவர் அனுராதா அவர்கள் கேன்சர் நோயுடன் போராடி மீண்டு வந்தவர்.

தன்னுடைய வலிகளையும் வேதனையையும் எழுத்தாக்கி வீழிப்புணர்ச்சி பதிவுகள் இட்டு வருகிறார்.
கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

இன்று மீண்டும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டு வாடும்போதும் தன் அருமைக் கணவருடைய உதவியுடன் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் தற்போதைய உடல் வேதனைகளில் இருந்து மீண்டு நலம் பெற்று குணமடைய பதிவர்கள் நம் பிரார்த்தனை நிச்சயம் உதவும்.

அவருக்காக நாம் ஒவ்வொருவரும் நம் இடத்திலிருந்தபடியே பிரார்த்திப்போம்

அவர் பதிவிலும் சென்று நம் நம்பிக்கையை பின்னூட்டமாக பதிவு செய்வோம் வாருங்கள்.

பிரார்த்தனை என்பது கடவுள் வழிபாடு மட்டுமல்ல.அவர் நலமடைய வேண்டும் என்ற ஆத்மார்த்த எண்ணமே கோடிப் பிரார்த்தனைகளுக்குச் சமம்.

அம்மா அனுராதா பூரண குணமடையட்டும்.